செவ்வாய், 17 செப்டம்பர், 2019

காதலை கற்று தந்துவிட்டு கண்ணீரை தந்தாயே ஏனடா ?

பெண்
ஆகாயத்திற்கும் நிலவுக்கும்
இடைவெளிகள் இல்லையென்று
இடித்துரைத்துவிட்டு
இடியாக என் மனதை
தாக்கி சென்றதும்
ஏனடா?
சடுகுடு விளையாடி
உன் தேகத்தில் நான் மோதி
கற்பனை சிறக்க
கண்ணயர்ந்து வேளை
கனவாக நீ சென்றதும்
ஏனடா?
கற்பனையில் வந்தவனே
கவிதையில் நின்றவனே
நித்தியமாய் நீயிருக்க
நித்திலமாய் நானிருக்க
நிஜமாக எனை விட்டு
பிரிந்ததும் ஏனடா
வெண்பஞ்சு குவியலாய்
உன்மகவை நான் சுமக்க
கண்பட்டு போனதால்
களங்கமாகி நின்றதால்
காதலே எனை
மறந்த சேதி என்ன
சொல்லடா?
ஆண்
அடி மனதில் பூத்தவளே
அன்னக்கிளி போன்றவளே
அன்னமுண்ணா நேரத்திலும்
அகத்துக்குள் நிறைந்தவளே
அன்னையை போலவந்து
தலையை கோதும் சின்னவளே
என் தேவை தனையறிந்து
எனக்காக விழிப்பவளே
நான் தேடா நொடியிலும்
எனக்காக துடிப்பவளே
உனைவிட்டு எங்கு செல்ல
உத்தமியை போல ஒரு
தாயுள்ளம் கொண்டவளை
இவ்வேழு உலகத்திலே
எங்கே நான் போய் தேட ?
நீ வந்த நெஞ்சுக்குள்ள
எந்த உசிரும் வந்திடுமா
நீ சொன்ன காதல்மொழி
மரணத்திலும் மறந்திடுமா
உசிரோடு கலந்தபின்னே
உடலையும் சுமந்தவளே
நீ கேட்ட மகவு உன்
உண்டியிலே வளருகையில்
என் உள்ளம் உன்னருகில்
உறங்குவதை அறிவாயோ
இந்த ஜென்மத்தில் நீ என்
மனுசி புள்ள
இன்னுமொரு ஜென்மம்
என்றால் நான் உன் சேயும்
புள்ள
எந்த ஜென்மம் எடுத்தாலும்
எந்தனுயிர் உன்னை சேரும்
சொன்ன வாக்கில் மாற்றமில்லை
சொக்கத்தங்கம் தேய்வதில்லை
நிலா
12/09/2019
லண்டன்
23.26

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக